சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அரசாணை: 2021-22ம் ஆண்டிற்கு இத்துறையின் மானியக்கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ‘ஒன்றிய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு முதல் பராமரிப்புப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் விகிதத்திற்கு இணையாக மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதல் செலவு ரூ.4.63 கோடி ஆகும். இத்திட்டத்தின் கீழ் 26,024 மாணாக்கர்கள் பயனடைவர்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கிணங்க, கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடுமாறு அரசை ஆதிதிராவிடர் நல ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பின்படி மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப் படியினை ஒன்றிய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு இணையாக, 2021-2022ம் கல்வி ஆண்டு முதல் உயர்த்தி வழங்கும் பொருட்டு ரூ.8.79 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது….