சென்னை: போலீஸ் விசாரணையில் உயிரிழந்தவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கொடுங்கையூர் பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு விசாரணைக்காக திருவள்ளூர் மாவட்டம் அலமாதி முந்திரிதோப்பு பகுதியை சேர்ந்த ராஜசேகர் (31) என்பவரை கடந்த 12ம் தேதி போலீசார் அழைத்துவந்தனர். அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் கெல்லீஸ் சிறார் நீதிமன்ற 12வது மாஜிஸ்திரேட் லட்சுமி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ராஜசேகரின் தாய் உஷாராணி, அண்ணன் மணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் 2 மணி நேரம் மாஜிஸ்திரேட் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதன்பிறகு ராஜசேகரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் உரிய நீதி விசாரணை நடைபெறாமல் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால், ராஜசேகரின் குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்….