Friday, May 17, 2024
Home » போலியோ சொட்டு மருந்து அளிக்க மார்ச் 3ம் தேதி முகாம் சுகாதாரத்துறை உத்தரவு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு

போலியோ சொட்டு மருந்து அளிக்க மார்ச் 3ம் தேதி முகாம் சுகாதாரத்துறை உத்தரவு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு

by Karthik Yash

வேலூர், பிப்.16: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க மார்ச் 3ம் தேதி முகாம்கள் நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. போலியோ நோயானது பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. இதனால் குழந்தைகள் உடல் ஊனமுற்று பாதிப்பிற்குள்ளாகும் நிலை காணப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் போலியோ தாக்குதலில் இருந்து குழந்தைகளை காக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். இதன்காரணமாக கடந்த 2015ம் ஆண்டு முதல் போலியோ இல்லாத நாடு என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு கருதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. மார்ச் 3ம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என சிறப்பு மையங்களில் முகாம் நடைபெறும். இம்மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் ஏற்பாடுகள் செய்யப்படும். நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட சுகாதாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi