திருவாரூர், மே 30: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 224 மனுக்கள் குவிந்தன. 7 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது.இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 224 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 500 வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 500 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ஒரு மாற்றுத்திறனாளிக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை ஆகியவற்றை கலெக்டர் சாரு வழங்கினார்.கூட்டத்தில் டிஆர்ஓ சிதம்பரம், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) அழகர்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.