வலங்கைமான், மே 30: வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் நேற்று பலத்த சூறை காற்றுடன் கன மழை பெய்ததால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது
இந்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணி அளவில் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது அப்போது முருங்கை, வாழை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன
மேலும் வலங்கைமான் குடவாசல் சாலையில் வலங்கைமான் அடுத்த கீழ விடையல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ துறையூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது. மரம் முறிந்து விழுந்த போது மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. சம்பவ இடத்திற்கு வலங்கைமான் மின்வாரிய உதவி பொறியாளர் அகஸ்தியா தலைமையில் மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணியினை மேற்கொண்டனர். மரம் சாலையில் விழுந்ததையடுத்து வலங்கைமான் குடவாசல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் விழுந்த மரங்களை கிராம மக்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர் அதேபோன்று பலத்த காற்று வீசியபோது தனியார் மனைப்பிரிவில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப்பலகை சாலையில் விழுந்தது.
திடீரென பெய்த மழையால் வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்படைந்தது. இதேபோல் குடவாசல் நகர பகுதியில் நேற்று மாலை பல இடங்களில் காற்றுடன் பெய்த கன மழையால் நன்னிலம் சாலையில் முதலியார் தெருவில் உள்ள வீர காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட அலங்கர ஆர்ச் மற்றும் பல இடங்களில் மரங்கள், கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.