சாயல்குடி,பிப்.18:சாயல்குடி,கடலாடியிலிருந்து முதுகுளத்தூர் வழியாக பரமக்குடி செல்லும் தஞ்சாவூர் மாநில நெடுஞ்சாலையின் இருபுறம் ஓரங்களில் நூற்றுக்கணக்கான பல வகை மரங்கள் உள்ளன. பெரும்பான்மையான இடங்களில் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள பழைய மரங்கள் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு நிழல் மற்றும் பயன்களை தந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் கடலாடி, முதுகுளத்தூர் சாலை வழித்தடத்தில் உள்ள ஒருவனேந்தல், தேவர்குறிச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள பழமையான மரத்தின் கிளைகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் தொங்குகிறது.
இதில் வாகனங்கள் செல்லும் போது இடையூறு ஏற்படுவதுடன் வாகனங்களின் பக்கவாடுகளில் உடைசி சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பஸ்ஸில் பயணிகள் இருக்கையோரம் அமர்ந்து செல்லும் போது மரக்கிளையிலுள்ள முள் கிழித்து காயங்கள் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் கிளைகள் உடைந்து தொங்குவதால் திடீரென காற்றிற்கு முறிந்து விழுந்தால் சாலையில் செல்வோருக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் சேதமடைந்து தொங்குகின்ற மரக்கிளைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.