விருதுநகர்,ஜன.13: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது: முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்தனர்.
தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம், ரசாயணம் கலந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துக் களுக்கும் காரணமாக உள்ளது. எனவே போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து சுற்றுச்சூழலை காக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.