பொன்னமராவதி,ஏப்.5: மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்து பக்தர்கள் பொன்னமராவதியில் தானானே என்று சொல்லக்கூடிய கோலாட்டம் அடித்தனர். பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் 8ம் தேதி நடைபெறஉள்ளது.
இதற்காக கடந்த மாதம் 24ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்ட நாளில் இருந்து பொன்னமராவதி சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் தினசரி இரவு நேரங்களில் கும்பி மற்றும் தானானே என்று சொல்லக்கூடிய கோலாட்டம் அடிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பள்ளபட்டி அருகில் உள்ள புதுப்பட்டி கிராம பக்தர்கள் கொன்னையூர் திருவிழாவிற்காக தங்கள் ஊரில் இருந்து நேற்று பொன்னமராவதி வந்து பட்டமரத்தான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள், முக்கிய இடங்களில் தானானே என்று சொல்லக்கூடிய கோலாட்டம் அடித்து வழிபட்டனர்.