தஞ்சாவூர், ஏப்.5: தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையின்போது உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் சரியான ஆவணங்களை காண்பித்தால் பறிமுதலான பணம் திருப்பி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் கோடியம்மன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராம்குமார் தலைமையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வலங்கைமானில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் வசூலான ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 500-ஐ தஞ்சை கரந்தையில் உள்ள அதன் கிளை நிறுவனத்துக்கு கொண்டு சென்றதும், ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.