பட்டிவீரன்பட்டி, ஏப். 15: பெரும்பாறை மலைப்பகுதியில் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க மலைத்தோட்ட விவசாயிகள் சேலைகளால் வேலி அமைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, கே.சி.பட்டி, மங்களங்கொம்பு, கும்பம்மாள்பட்டி பகுதிகளில் உள்ள மலைப்பகுதி தோட்டங்களில் மலைவாழை, ஆரஞ்சு, சவ்சவ், கேரட் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.
இந்த தோட்டங்களுக்குள் புகும் காட்டுப்பன்றி, காட்டுமாடுகள் உள்ளிட்ட வனவிலங்குகள், அவைகளை தின்று நாசம் செய்கின்றன. இதனால், மலைத்தோட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெரும்பாலன விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் உள்ள பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க கலர், கலரான சேலைகளைக் கொண்டு வேலி அமைத்துள்ளனர்.
முன்பு பசுமையாக காட்சியளித்த மலைச்சாலைகள், தற்போது பல வண்ண சேலைகளால் கலர்புல்லாக காட்சிளிக்கின்றன. இதனை இப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசிக்கின்றனர். இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த மலைத்தோட்ட விவசாயிகள் கூறுகையில், ‘இந்த சேலை வேலிகளை பார்க்கும் வனவிலங்குகள், தோட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக கருதி உள்ளே நுழையாமல் சென்று விடுகின்றன’’ என்றனர்.