தாம்பரம், டிச.14: தாம்பரம் அருகே 8 அடி நீள முதலை பிடிபட்டது. அது, கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. பெருங்களத்தூர் அருகே சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதிகளில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த நீர்நிலைகளில் பல ஆண்டுகளாக முதலைகள் உள்ளது. இவை இரவு நேரங்களில் நீர்நிலைகளில் இருந்து வெளியே வந்து குடியிருப்புகளில் உள்ள கோழி, வாத்து, நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவது வழக்கம். இதன் காரணமாக, இரவு நேரங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் என யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும், முதலைகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3ம்தேதி இரவு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையின்போது நெடுங்குன்றம், காந்தி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சுமார் 7அடி நீளம் முதலை நெடுங்குன்றம் ஏரியிலிருந்து வெளியேறி சாலையைக் கடந்து சென்றது. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஆலப்பாக்கம், வேப்பந்தாங்கல் ஏரி அருகே எஸ்எஸ்எம் நகர் செல்லும் சாலையில் தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் நேற்று மதியம் சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்று இருப்பதை கண்ட பொதுமக்கள் பீதிடைந்தனர். உடனடியாக, தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தாம்பரம் வனத்துறையினர் மற்றும் கிண்டி வன உயிரின சரகத்தினர் என 13க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சென்று, சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி 8 அடி நீள முதலையை பத்திரமாக மீட்டு கிண்டி சிறுவர் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே, ஆலப்பாக்கம், வேப்பந்தாங்கல் ஏரியில் உள்ள முதலைகளில் ஒரு முதலை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுபோல, அடிக்கடி இப்பகுதியில் ஏரிகளில் இருந்து முதலைகள் வெளியேறி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.