பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மாஸ் கிளினீங் பணியை நேற்று திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகர் துவக்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சென்னை நகரின் பல்வேறு மண்டலங்களில் மாஸ் கிளினீங் எனும் தூய்மை பணிகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, அந்தந்த பகுதிகளில் உள்ள குப்பைகள், மரக்கழிவுகள், கட்டிட கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, இடங்களை தூய்மைப்படுத்துவது இவர்களின் முக்கிய பணியாக உள்ளது.இந்நிலையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி சஞ்சய் நகர் பகுதியில் நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருந்த குப்பைகள், கட்டிட கழிவுகளை அகற்றி, மாஸ் கிளீனிங் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நேற்று தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி வெங்கடேசன் மேற்பார்வையில் துவங்கியது. இப்பணிகளை திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகர் பங்கேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து அப்பகுதியில் பராமரிப்பில்லாமல் மாநாகராட்சி பூங்காவில் இருந்த குப்பைகள் அகற்றபட்டன. ஒவ்வொரு தெருக்களிலும் இருக்கும் குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றியதால், அப்பகுதி முழுவதும் தூய்மையாக காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து 35-வது வட்டம் கண்ணதாசன் நகர் பகுதியில் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 8 ராட்சத இயந்திரங்களை கொண்டு கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று மாலை திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகர், வாரிய பொறியாளர் சகாதேவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அனைத்து பகுதிகளிலும் எவ்வித பாதிப்புமின்றி கழிவுநீர் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகர் உத்தரவிட்டார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், வாகன நடமாட்டம் இல்லாத காரணத்தினால் இப்பணிகளை விரைந்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்….
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மாஸ் கிளீனிங் பணி தீவிரம்: ஆர்.டி.சேகர் துவக்கினார்
previous post