ஊத்துக்கோட்டை: பெரம்பூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீமித்து அம்மனை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27ம்தேதி பக்காசூரன் வதம் மற்றும் 3வது நாள் திருக்கல்யாணம், 4வது நாள் நச்சி குழியாகம், 5வது நாள் அரக்கு மாங்கோட்டை, 6வது நாள் அர்ஜூனன் தபசு, 7வது நாள் தர்மராஜா வீதியுலா, 8வது நாள் மாடுபிடி சண்டை, 9வது நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் 10வது நாளான நேற்று முன்தினம் மாலை லச்சிவாக்கம் செங்காளம்மன் கோயிலில் இருந்து திரவுபதி அம்மனை டிராக்டரில் ஊர்வலமாக அழைத்து வந்து, வயல் வெளிகளில் இறக்கி, பெரம்பூர் கிராமத்தில் தீ மிதிக்கும் இடத்திற்கு கொண்டுவந்தனர். இதன்பிறகு காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் 110 பேர், அம்மனுடன் ஊர்வலமாக வந்து தீ மிதித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கடைசி நாளான நேற்று அரவான், இறுதிசடங்கு நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு தீமிதி திருவிழா நிறைவு பெற்றது.