பெரம்பலூர்,செப்.3: இடி, மின்னல் தாக்கியதில் வயலில் கட்டி இருந்த 2 பசுமாடுகள் பலியானது.பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக நேற்று முன்தினம் இரவு இடி மன்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த இடிமழையின்போது, வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த செபஸ்தியார்(50) என்பவருக்கு சொந்தமான வயலில் கட்டி வைத்திருந்த 3 வயதுடைய சினைப்பசு மாடு ஒன்றும், 2வயதுடைய மற்றொரு பசுமாடும் என 2 பசுமாடுகள் இடி மின்னல் தாக்கி பலியாயின. இது குறித்து செபஸ்தியார் கொடுத்த தகவலின் பேரில் அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகிலுள்ள கால்நடைத்துறை மருத்துவர் நேரில் வந்து நடத்திய பிரேத பரிசோதனைக்குப் பிறகு பசு மாடுகள் புதைக்கப்பட்டன.