ஜெயங்கொண்டம், ஏப்.13: கங்கைகொண்ட சோழபுரத்தில் பங்குனி திருவிழா உற்சவத்தை முன்னிட்டு பால்குடம் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம்,கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு மகிஷாசுரமர்த்தினிக்கு 95 ம் ஆண்டு மகா பங்குனித்திருவிழா உற்சவம் நேற்று நடைபெற்றது.
நேற்று காலை 9 மணிக்கு நாச்சியார் குளக்கரையில் இருந்து பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடவை செலுத்தினர். மதியம் 12மணி அளவில் மகிஷாசுரமர்த்தினிக்கு மஹாஅபிஷேகமும், மாலை 6மணி நாதஸ்வர இன்னிசை கச்சேரி மற்றும் சந்தன காப்பு அலங்காரமும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீ அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. இதேபோல் பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.