பெரம்பலூர்,மார்ச்.7: போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை கைது செய்து, நீதிமன்ற பிடிவாரண்டு உத்த ரவை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் நிறைவேற்றினர். பெரம்பலூர் மாவட்டம், அய்யலூர் கிராமம், இளங்கோ நகரைச் சேர்ந்தவர் கோபால் மகன் மகேந்திரன்(42). இவர்மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைதாகி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்து பின் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து மகேந்திரன் மீது பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதி மன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச் சாமி வழிகாட்டுதலின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த மகேந்திரனை தேடி வந்தனர்.
இதன்படி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான குழுவினர் நேற்று (6ம் தேதி) மகேந்திரன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நீதிமன்ற பிடிவாரண்டு உத்தரவை நிறேவேற்றி உள்ளனர்.