அன்னூர், ஜன.7: கோவை மாவட்டத்தில் 25ம் ஆண்டு பென்சனர் தின விழா அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் அன்னூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜ் அண்ணன் தலைமை வகித்தார். இதில் 80 வயது நிரம்பிய மூத்த பென்சனர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து 70 வயது நிரம்பிய மூத்த பென்சனர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் மருத்துவ காப்பீடு திட்டத்தை எளிமையாக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் முருகன், வட்டார தலைவர் நடராஜன், வட்டார பொருளாளர் நடராஜன், வட்டார செயலாளர் பொன்னுச்சாமி உள்பட 500க்கும் மேற்பட்ட பென்சனர்கள் பங்கேற்றனர்.