அரியலூர், மார்ச் 9: பெண்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்று மகளிர் தின விழாவில் காவல் துறை அதிகாரி பேசினார். அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசுப் பள்ளியில் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். இதில் கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர் குணமதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது; பெண்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும். மகளிர், ஆண்களுக்கு நிகரானவர் அல்ல. ஆண்களையும் விட சக்தி படைத்தவர்கள். உலக மக்கள் தொகையில் மகளிர் 400 கோடி பேர் உள்ளனர். அத்தகைய மகளிரை ஒதுக்கிவிட்டு மாபெரும் சாதனைகள் எதையும் நிகழ்த்த முடியாது. மகளிர் அறிவில் சிறந்தவர்கள் என்பது ஒவ்வொரு ஆண்டு தேர்வு முடிவுகளில் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது .
எனவே ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தில் உள்ள தாய், சகோதரி, உறவினர்கள் இப்படி அனைத்து நிலைகளிலும் பெண்களை மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தலைமை காவலர் பேபி ஷாலினி, முதல் நிலை காவலர் திருநாவுக்கரசு, சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ், சிறப்பாசிரியர் செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மகளிர் தினம் குறித்து அக்கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி ஆகியோர் செய்திருந்தனர். செந்தமிழ் செல்வி வரவேற்றார். தனலட்சுமி நன்றி கூறினார்.