பாடாலூர், மார்ச் 9: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு தொடங்கி 4 காலத்திற்கு நடைபெற்ற பூஜைகளையொட்டி மூலவருக்கு வாசனை திரவியங்கள், பால், இளநீர் உள்ளிட்ட அபிசேக பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தன.
4 காலபூஜைகளிலும் செட்டிகுளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயில், பாடாலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில், புதுக்குறிச்சி கிராமத்தில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் மன்னார் ஈஸ்வரன்-பச்சையம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது.