புளியங்குடி,ஆக.11: புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி புளியங்குடி காந்தி பஜாரில் அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் கடந்த 7ம் தேதி மாலை சுசித்ரா பாலசுப்ரமணியன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. 8ம் தேதி மாலை ‘வேல் உண்டு வினை இல்லை’ என்ற தலைப்பில் கவிதா ஜவஹர் பேசினார். 9ம் தேதி காலை பால்குட ஊர்வலம், சுவாமி அழைப்பை தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதையொட்டி உற்சவ மூர்த்தி மண்டகப்படிக்கு எழுந்தருளியதும் கும்பஜெபம், பல்வேறு ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சிகளில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்வி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்வி முருகையா, இணைத் தலைவர் சுந்தர்ராஜ், கவுரவ தலைவர் பாலாஜி கிரானைட்ஸ் அதிபர் பிஎஸ் சங்கர நாராயணன், துணைத்தலைவர் அருணாசலம், செயலாளர் சண்முக சுந்தரம், பொருளாளர் கணேசன் மற்றும் விழா குழுவினர், காந்தி பஜார் வியாபாரிகள் செய்திருந்தனர்.