விருதுநகர், நவ.25: விருதுநகர் பாண்டியன்நகர் புனித சவேரியார் ஆலய 24ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணியளவில் ரோம் நகர புனித பிரான்சிஸ் டீ சேல்ஸ் சபையின் ஆலோசகர் ஸ்டீபன், பாண்டியன்நகர் பங்குத்தந்தை லாரன்ஸ், எஸ்.எப்.எஸ் பள்ளி முதல்வர் ஆரோக்கியம், உதவி பங்கு தந்தை இம்மானுவேல் சதீஷ் மற்றும் பங்கு இறைமக்கள் முன்னிலையில் தூய சவேரியார் திருஉருவம் பொறித்த கொடியை புதிதாக அர்ச்சிக்கப்பட்ட 53 அடி உயர வெண்கல கொடிமரத்தில் ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஆலயம் வண்ணத் தோரணங்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவிழா நாட்களில் தினசரி மாலை ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9ம் நாளான டிச.2 மாலை ஆர்.ஆர்.நகர் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை பீட்டர் ராய் தலைமையில் திருவிழா திருப்பலி மறையுரை நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து தூய சவேரியார், தூய லூர்து அன்னை, மிக்கேல் அதிதூதர் திரு உருவம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை லாரன்ஸ், எஸ்எப்எஸ் பள்ளி முதல்வர் ஆரோக்கியம், உதவி தந்தையும் இம்மானுவேல் சதீஸ் தலைமையில் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.