புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 நாட்களாக மூன்று கால யாகபூஜை நடைபெற்று வந்தது. நேற்று நான்காம் கால யாக பூஜை முடிவுற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் கோயிலை சுற்றி வலம் வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நாகுடி சுற்று வட்டார கிராம மக்கள், ஆன்மீக அன்பர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கோபுர தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.