ஈரோடு, செப். 11: ஈரோடு மாவட்டம் டி.ஜி புதூர்-கம்பூர் சாலையில், சோதனை சாவடியில் நேற்று முன்தினம் பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மொபட்டில் வந்த நபர் ஒருவர், போலீசாரை கண்டதும் மொபட்டை திருப்பி தப்பி செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் அந்த நபரை விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்த நபர் பெருந்துறை சீனாபுரத்தை சேர்ந்த பழனிசாமி( 40) என்பதும், அவரது மொபட்டினை சோதனை செய்தபோது, அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனைக்கு எடுத்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பழனிசாமியை கைது செய்து, அவரிடம் இருந்த 7.90 கிலோ எடையுள்ள புகையிலை, குட்கா பொருட்களையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.