வேலூர், மார்ச் 15: வேலூரில் உள்ள பியூட்டி பார்லரில் வாடிக்கையாளரை அனுப்புவதில் ஏற்பட்ட பிரச்னையில் 2 பெண் பணியாளர்கள் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் பிரபல பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இங்கு மேலாளராக தீபா என்பவரும், பியூட்டிசனாக மாயசுதா என்பவரும் வேலை செய்து வருகின்றனர். இவர்களிடையே வாடிக்கையாளர்களை அனுப்புவதில் பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி பியூட்டி பார்லருக்கு வந்த வாடிக்கையாளர்களை மாயசுதாவுக்கு அனுப்பாமல் மற்ற பியூட்டிசன்களுக்கு மேலாளர் தீபா அனுப்பினாராம். இதுகுறித்து தீபாவிடம் மாயசுதா கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதேபோல் இருதரப்பினரின் ஆதரவாளர்களும் தாக்கிக்கொண்டார்களாம். இதில் தீபா மற்றும் மாயசுதா ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் வடக்கு போலீசில் தனித்தனியாக நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் தீபா, மாயசுதா உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.