செய்யாறு, மார்ச் 15: செய்யாறு அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராம விரிவு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது 2வது மகன் வெங்கடேசன்(17). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாணவன் வெங்கசேடன் கல்லூரிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறி சென்றுள்ளார். ஆனால், கல்லூரிக்கு செல்லாமல் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் லோகேஷ், கிரீனாத், கிரிதரன், குருசாமி ஆகிய 4 பேருடன் கல்லூரி அருகில் செய்யாற்றைவென்றான் மோட்டூர் கிராமத்தில் விவசாய பம்பு செட்டில் உள்ள கிணற்றில் குளித்துள்ளார்.
அப்போது, கிணற்றின் மேல்புறத்தில் இருந்து ஒவ்வொருவராக நீரில் குதித்தபோது எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் நீரில் மூழ்கினார். இதனால் மூச்சுத்திணறி தவித்த அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், வெங்கடேசன் மயக்கம் அடைந்தார். தொடர்ந்து, மாணவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெங்கடேசனின் தந்தை பிரகாஷ் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.