பாடாலூர்:ஆலத்தூர் தாலுகா வட்டார அளவிலான கலைத்திருவிழா பாடாலூர் தனியார் மகாலில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் (உயர் தொடக்க நிலை) தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் (தொடக்க நிலை) முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி, அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ரெங்கநாயகி, பெரியார் குடில் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியை தாஜ்பீபீ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.போட்டியானது பள்ளி அளவில் போட்டிகளில் முதல் இடத்தில் தேர்வான மாணவர்களுக்கு நேற்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டிகளில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகளை ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், வானவில் மன்ற வட்டார கருத்தாளர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் வஹிதா பானு அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் இளங்கோவன் நன்றி கூறினார்.