சேந்தமங்கலம்: எருமப்பட்டி பேரூராட்சியில், பாஜ சார்பில் நடந்த சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில், ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய பாஜ சார்பில், 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம் அம்பேத்கர் நகரில் நடந்தது. ஒன்றிய தலைவர் செந்தில் பாரதி தலைமை வகித்தார். மண்டல தலைவர் ராமலிங்கம், கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசுகையில், ‘உலக அரங்கில் பிரதமர் மோடி, இந்திய நாட்டிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். தொழில் வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் அதிக மக்கள் பயனடைந்துள்ளனர். ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம், அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் அதிநவீன மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது,’ என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் சேதுராமன், முத்துக்குமார், மேற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், செயலாளர்கள் நாகராஜன், தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.