காஞ்சிபுரம், ஜூலை 1: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், ஆனி மாத ஏகாதசியையொட்டி, சிறப்பு அலங்காரத்துடன் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நகரம் என அழைக்கப்படும் கோயில்களில் ஒன்றான பழமையும், வரலாற்று சிறப்புமுடையதாகவும் காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆனி மாத ஏகாதசி தினத்தன்று உற்சவர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அந்த வகையில் ஆண்டுக்கு 3 முறை கோயில் கருடசேவை நிகழ்வு நடைபெறும்.
அதில், வைகாசி மாத பிரமோற்சவத்தின் 3ம் நாள் கருடசேவை நிகழ்வை தொடர்ந்து, ஆனி மற்றும் ஆடி மாதம் என 3 முறை கருடசேவை நடைபெறும். அதில், ஆனி மாத கருடசேவையை முன்னிட்டு, நேற்று அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், முத்துக்கொண்டை சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோயில் மாட வீதிகளில் வலம் வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து, பெருமாள் வீதிஉலா முடிந்ததும், பெரியாழ்வார் சாற்று முறை உற்சவமும் நடைபெற்றது. இதில், ஏராளமான வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.