கருங்கல் : கருங்கல் அருகே மேல்மிடாலம் – இனயம் செல்லும் ரோட்டில் கைதவிளாகம் பகுதியில் இருந்து ஹெலன் நகருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஒப்பந்ததாரர் பணியை செய்யாமல் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.இந்த நிலையில் நேற்று மேல் மிடாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 4 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் இறங்கினர்.தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும் என வாக்குறுதி கொடுத்தால்தான் போராட்டத்தை விடுத்து கலைந்து செல்வோம் என உறுதியுடன் கூறி சாலை மறியலை தொடர்ந்தனர்.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சாலை பணியை முடித்து விடுவதாக அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்….