பழநி, ஜூலை 6: பழநி பெரியாவுடையார் கோயிலில் உலக நலன் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி அன்னாபிஷேக விழா நடந்தது. கந்தவிலாஸ் விபூதி நிறுவனம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடராஜர் சன்னதி முன்பு புனித கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், ஸ்கந்தயாகம் போன்றவை நடந்தது. தொடர்ந்து சிவன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, சண்டிகேஸ்வரர், பைரவர், ருத்திரர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் கோயிலின் உட்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பழநி கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியர்கள் பூஜைகளை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன் விஸ்ணு, நரேஷ்குமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.