வேலூர், ஜூன் 9: வேலூர் மாவட்டத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 240 உயர், மேல்நிலைப்பள்ளிகள், 779 நடுநிலை, தொடக்கப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், வரும் 12ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், மற்றும் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் உள்ளிட்டோர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் புதர் மண்டி கிடைக்கும் பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், வகுப்பறையில் வர்ணம் பூசும் பணிகளும், கழிப்பட வசதிகள் குடிநீர் வசதி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் கோடையிடி குப்புசாமி மேல்நிலைப்பள்ளியில் செடிகள், புதர்களை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு, மாநகாட்சி ஊழியர்கள் அகற்றினர். அதே போல் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பாட புத்தகங்கள் 80 சதவீதம் வந்துள்ளது. மீதம் உள்ள பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.