திருவண்ணாமலை, ஜூன் 9: திருவண்ணாமலையில் திரவுபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை பே கோபுர வீதியில் உள்ள நூற்றாண்டு பழமையான பஞ்சபாண்டவர் சமேத மேட்டு திரவுபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, கடந்த 6ம் தேதி முதல் காலயாகசாலை பூஜை நடந்தது. பின்னர், 7ம் தேதி இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை 4ம் கால யாகசாலை பூஜையும், யாத்ராதானமும் நடைபெற்றது. பின்னர், கலசபுறப்பாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோயில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக, நேற்று மாலை சுவாமி திருக்கல்யாணமும், மாட வீதியுலாவும் நடந்தது. மேலும், இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது.