Friday, May 17, 2024
Home » பள்ளி, கல்லூரிகள் அருகே மாணவர்களோடு மாணவனாக கலந்து போதை பொருட்கள் விற்பனை செய்த ஆந்திர வாலிபர் கைது: கஞ்சாவை வேரோடு ஒழிக்க எஸ்பி வருண்குமார் தலைமையில் தனிப்படை அமைப்பு

பள்ளி, கல்லூரிகள் அருகே மாணவர்களோடு மாணவனாக கலந்து போதை பொருட்கள் விற்பனை செய்த ஆந்திர வாலிபர் கைது: கஞ்சாவை வேரோடு ஒழிக்க எஸ்பி வருண்குமார் தலைமையில் தனிப்படை அமைப்பு

by kannappan

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே மாணவர்களோடு மாணவனாக கலந்து கஞ்சா விற்பனை செய்து வந்த ஆந்திரா வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை வேரோடு ஒழிக்க எஸ்பி வருண்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் ஒழிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் மற்றும் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி வருண்குமாருக்கு தொடர் புகார்கள் வந்தது. தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை வேரோடு ஒழிக்க தனது மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக கஞ்சா குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 6379904848 என்ற சிறப்பு செல்போன் எண் மற்றும் அதே எண்ணில் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பலாம். தகவல் தரும் பொதுமக்களுக்கு சன்மானமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதன்படி இந்த செல்போன் எண்ணிக்கு வரும் புகாரின்படி உடனுக்குடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே ஒருவர் கல்லூரி மாணவர் போல் புத்தகங்களை எடுத்து செல்லும் பையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி குற்றவாளியை பிடிக்க திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எஸ்ஐ சிவா, சக்திவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை அதிரடி நடவடிக்கையில் நேற்று முன்தினம் புட்லூர் ரயில் நிலையம் அருகே விவேகானந்தா பள்ளி அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தோளில் பையுடன் சுற்றிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த தனிப்படையினர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 10 மில்லி லிட்டர் கொண்ட 27 பாட்டில்கள் கொண்டு ஆஷ் ஆயில், பாலிதீன் கவரில் நிரப்பப்பட்டு கட்டப்பட்டிருந்த 1 லிட்டர் ஆஷ் ஆயில், 12 போதை தரக்கூடிய எஸ்எஸ்டி ஸ்டாம்ப், கஞ்சாவை பொடியாக்கும் அலுமினியத்தால் ஆன கருவி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு பிடிப்பட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மண்டலம் தாடேபள்ளி தானம்மா கோயில் தெருவை சேர்ந்த ஆதித்யா(22) என்பதும் தெரியவந்தது. இவர் சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே மாணவர் போல் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கஞ்சாவை நேரடியாக கொண்டு வந்தால் போலீசார் பிடித்துவிடுவார்கள் என்று, அதை எண்ணெயாக மாற்றி (ஆஷ் ஆயில்) நாட்டு மருந்து என கூறி ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுவரை இந்த வாலிபர் 30 கிலோ கஞ்சா, கஞ்சா விதை மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு 1 லிட்டர் ஆஷ் ஆயில் தயாரித்து அதன் மூலம் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ஆதித்யாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது….

You may also like

Leave a Comment

12 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi