Thursday, June 13, 2024
Home » கட்டுப்பாடுகள் நீக்கம்

கட்டுப்பாடுகள் நீக்கம்

by kannappan

கொரோனாவின் 3வது அலை மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரம் வரை அதிகரித்தது. இதையடுத்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை அறிவித்து செயல்படுத்தியது. தற்போது தமிழக அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு மீண்டும் வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.வரும் 16ம் தேதி முதல் 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த நர்சரி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. துணி, நகைக் கடைகள் நூறு சதவீதம் இயங்கவும், திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்க நிகழ்வுகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிகளை இனிமேல் நடத்தலாம். அழகு நிலையங்கள், சலூன்கள், திரையரங்குகள், கருத்தரங்குகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட அனைத்திலும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் ஒரு பக்கம் வாட்டுவதை விட, அதை தொடர்ந்து போடப்படும் ஊரடங்குகள் மக்கள் வாழ்வையே புரட்டி போட்டு வருகின்றன. எந்தவொரு இடத்திற்கு சென்றாலும் நிபந்தனை, கட்டுப்பாடுகள் என மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து விட்டனர். சாதாரண, நடுத்தர மக்கள் கையில் வைத்திருக்கும் கொஞ்ச பணத்தையும் அபராதம் என்ற பெயரில் பிடுங்கிய அதிகாரிகளையும் பொதுமக்கள் திட்டித் தீர்த்தனர். அன்றாடங் காய்ச்சிகள் வேலைக்கே வழியின்றி திணறும் நிலையும் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசிகள் செலுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. விளைவு இன்று கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததோடு, கட்டுப்பாடுகளிலும் அதிகளவு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்திற்குமே மகிழ்ச்சியை அளிக்கும் இத்தளர்வை நாம் நல்லமுறையில் பின்பற்றிட வேண்டும்.தளர்வுகள் கிட்டினாலும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் முக்கியமானதாகும். அனைத்து கடைகளும் நுழைவாயிலில் சானிடைசரை வைத்து, ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட வேண்டும். 2 தவணை தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை அனைவரும் முறையாக எடுத்துக் கொள்வதும் எதிர்காலத்தில் கொரோனாவில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள வழிகாட்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்கிட அரசின் வழிகாட்டுதல்களை நிச்சயம் அனைவரும் கடைபிடிப்போம்….

You may also like

Leave a Comment

13 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi