பள்ளிப்பட்டு, ஏப். 15: பள்ளிப்பட்டில் அபாய நிலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேய நகரில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் விரிசல் விட்டு, சிமென்ட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் தெருவில் சென்று வரவும், பலவீனமடைந்துள்ள மின் கம்பங்களுக்கு அருகில் சிறுவர்கள் விளையாடவும் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பலவீனமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.