வருசநாடு, டிச. 9: தேனி அருகே சங்கரலிங்காபுரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (40). இவர் கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சரவணதேவி. இவர் கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுடைய விவாகரத்து வழக்கு பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக சரவணதேவியை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு துரைப்பாண்டி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணதேவி பள்ளிக்கு சென்ற துரைப்பாண்டி, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு மீண்டும் தகராறில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்து சென்றார். இது தொடர்பாக சரவணதேவி புகாரில் கண்டமனூர் போலீசார் துரைப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.