கோவை, ஏப். 13: கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் நேற்று பல்லடம் பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர் தினமும் தனது தொகுதி மக்களை திறந்தவேனில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். அவர் காய்கறி விற்றும், மலைவாழ் மக்களுடன் நடனமாடியும், நெசவு நெய்தும் தனது பகுதி மக்களிடம் உரையாடி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அவர் நேற்று பல்லடம் தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம் பெருமாள் கோயில், வாவிபாளையம், மந்திரிபாளையம், கேத்தனூர், எலவந்தி, வடுகபாளையம், துத்தாரிபாளையம், வலையபாளையம், புத்தரச்சல், கெங்கநாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன்பாளையம், காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களை நேரில் சென்று இரட்டை இலைக்கு ஓட்டளிக்கும்படி கேட்டு கொண்டார்.
அப்போது, அவர் அதிமுக அரசின் திட்டங்களை எடுத்து கூறியும், மதவாத பாஜ அரசின் மக்கள் விரோத கொள்கைகளை சொல்லியும் வாக்கு கேட்டார். மேலும் ஜெயித்தாலும், தோற்றாலும் எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் அதிமுக, எனது பணியும் அவ்வாறே இருக்கும் என்றார். இந்த பிரசாரத்தின்போது, பல்லடம் பகுதி அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் உடன் சென்றனர்.