மேட்டுப்பாளையம், ஏப்.13: கோவை, திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை இருந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 63.50அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.
மேலும், அணையில் நீர் இருப்பு 70 அடிக்கும் மேல் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் கடந்த மூன்று மாதங்களாக மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டிருந்தது. பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டால் மட்டுமே பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பில்லூர் அணையில் நீர் மட்டம் குறைந்த காரணத்தால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், பவானி ஆறு வற்றி குட்டை போல் காட்சியளித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து துவங்கியது. இதன் காரணமாக, பில்லூர் அணையில் இருந்து நேற்று பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின்னர் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்தால் விவசாயிகளும், சுற்று வட்டார மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.