பல்லடம், ஜூலை 24: பல்லடம் அருகே 63 வேலம்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை நேற்று நள்ளிரவில் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்லடம் அருகேயுள்ள 63 வேலம்பாளையத்தில் தனியார் தார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை இரவு நேரத்தில் மட்டுமே இயக்கப்படுவதாகவும். அதில் இருந்து வரும் நச்சு புகை பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி அப்பகுதி பொதுமக்கள் அந்த தார் தொழிற்சாலையை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் நடராஜ், ஊராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் சம்பந்தமூர்த்தி, ஈஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பிரசனை குறித்து கேட்டறிந்தனர். மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு அதிகாரிகள், பொதுமக்கள், தனியார் நிர்வாகம் ஆகியோரிடம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். அதுவரை தற்காலிகமாக தார் தொழிற்சாலையை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதனை அனைவரும் ஏற்று கலைந்து சென்றனர். நள்ளிரவில் திடீர் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.