Thursday, May 16, 2024
Home » பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்

பலகோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவு; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் தற்கொலை காட்பாடி அருகே சோகம்

by kannappan

திருவலம்: ஐஎப்எஸ் தனியார் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்த உரிமையாளர்கள் தலைமறைவானதால், அதன் ஏஜென்ட் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்பாடி அருகே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐஎப்எஸ்(இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீசஸ்) என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் முதலீடு பணத்திற்கு மாதந்தோறும் ஒரு லட்சத்திற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தால் ஏராளமானோர் தொகையை முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக வட்டி பணம் வழங்காமல் நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இதனையடுத்து அந்தந்த காவல்நிலையங்களில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 5ம் தேதி ஐஎப்எஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான காட்பாடி காந்திநகரில் உள்ள தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் என மொத்தம் 21 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 6 இடங்களில் நடந்த ரெய்டில் பல லட்சம் பணம், பென்டிரைவ்கள் உட்பட முக்கிய ஆவணங்கள், காசோலைகளை வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காட்பாடி காந்திநகரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. நிதிநிறுவன உரிமையாளர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் காட்பாடி கிளையில் சேவூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(28), கடந்த சில மாதங்களாக ஏஜென்ட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 30க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து முதலீடாக சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேலாக பணத்தை பெற்று அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி தனியார் நிதிநிறுவனம் மூடி சீல் வைக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் வினோத்குமாரை முற்றுகையிட்டு பணத்தை திரும்ப தர கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் 5ம் தேதி இரவு வீட்டின் பின்புறம் உள்ள பழைய வீட்டில் உறங்க சென்றாராம். இதனையடுத்து நேற்று முன்தினம் மதியம் 12மணி வரை வினோத்குமார் வீட்டிருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் இந்திரா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்த திருவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi