கோவை, ஏப். 10: கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மாவட்டத்தில் பணம், சேலைகள், தங்கம், வைரம், செல்போன், புட்டு மேக்கர், கிரேடிட் கார்டு, மது பாட்டில்கள் என 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.12.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில், ரூ.6.86 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மேலும், ரூ.5.17 கோடி மதிப்பிலான தங்கம், பணம் ஆகியவை உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காத காரணத்தினால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.