பண்ருட்டி, ஜூன் 24: பண்ருட்டி அருகே வங்கி அதிகாரி வீட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொகுசுகாரை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூரை சேர்ந்தவர் சசிகுமார் (27). நெய்வேலி வட்டம் 10ல் உள்ள கனரா வங்கி காசாளர். நெய்வேலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒறையூருக்கு வாரம் ஒருமுறை வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை ஒறையூரில் உள்ள இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து வங்கி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
சசிகுமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசுகாரையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். கொள்ளை போன நகைகள், கார் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சமாகும். தகவல் அறிந்த டிஎஸ்பி சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.