பண்ருட்டி, மார்ச் 24: கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலி மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டியை அடுத்த சொரத்தூரில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜைகள் முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை மீண்டும் கோயிலுக்கு வந்தபோது, கோயிலின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த உண்டியலையும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முந்திரி தோப்பிற்குள் எடுத்து சென்று உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து கொண்டு உண்டியலை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.