பட்டுக்கோட்டை, மார்ச் 22: பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து பேரணியாக புறப்பட்டு வெங்கட்ராமையர் தெரு, நாடிமுத்துநகர், பேருந்து நிலையம், பழனியப்பன்தெரு, மணிக்கூண்டு, சின்னையா தெரு, மைனர் பங்களா வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
விழிப்புணர்வு பேரணிக்கு பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சுகன்யா முன்னிலை வகித்தார். பேரணியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி முழக்கமிட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வழங்கியும் சென்றனர்.