தஞ்சாவூர், மார்ச் 22: தஞ்சாவூரில் மொபட்டை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் ராஜராஜ சோழன் நகர் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் தனபால் (58). இவர் கடந்த 20ம் தேதி தனது மொபட்டை புதிய கோர்ட் வளாகம் பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த தனபால் இதுகுறித்து தஞ்சாவூர் தெற்கு போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தனபால் மொபட்டை மன்னார்குடி முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த வேலு என்பவரின் மகன் கணேசன் (44) திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட மொபட் மீட்கப்பட்டது.