பட்டிவீரன்பட்டி, ஜூன் 23: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாமிற்கான முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மற்றும் உட்பிரிவு மாறுதல், புதிய ரேசன் கார்டு, வங்கிக்கடன் போன்ற கோரிக்கைகள் தொடர்பான 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை ஆத்தூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் நிர்மலாகிரேஸ் பெற்றுக்கொண்டார். முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணி, அய்யம்பாளையம் பேரூராட்சித் தலைவர் ரேகா அய்யப்பன், வருவாய் ஆய்வாளர்கள் சர்மிளா, சரவணன், ஜான்பிரிட்டோ, அய்யம்பாளையம் நகர திமுக செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகன் நன்றி கூறினார்.
இம்முகாம் குறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ‘‘பொதுமக்கள் ஆடு, மாடு வாங்கவும், விவசாயம் தொடர்பானன மானியத்துடன் கூடிய கடன்களை பெறவும் விண்ணப்பிக்கலாம். புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச வீட்டு மனை பட்டா பெற மனுக்கள் அளிக்கலாம்’’ என்றனர்.