செங்கோட்டை, மார்ச் 20: நீட் அடிப்படை பயிற்சி தேர்வில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் தேசியஅளவில் 3ம் இடம் வென்று சாதனை படைத்துள்ளனர். லீட் அமைப்பு சார்பில் தேசிய அளவில் நடத்தப்பட்ட நீட் அடிப்படை பயிற்சி தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இதில் செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரத்தில் செயல்படும் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவர்கள் 3வது இடத்தை வென்று சாதனை படைத்தனர். பள்ளியின் 6ம் வகுப்பு மாணவன் மரியஜோபில், 8ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தாப் ஆகியோர் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து இவர்களை பள்ளித் தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.