நீடாமங்கலம், பிப். 7: நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுக்கா பகுதிகளில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். சாகுபடி செய்த நெல் மணிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.விற்பனை செய்த நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து அருகில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள், நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி ஆகிய இடங்களில் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரயில் வேகன்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சன்ன ரகம் மற்றும் பொது ரக நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பப்படுகிறது.
இதேபோல தனியார் முகவர்களிடம் கொள்முதல் செய்யம்படும் நெல்லை அரசு நவீன அரிசி ஆலை சுந்தரக் நோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனியிலிருந்து அரவை செய்த அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியாக திட்டத்திற்கு அனுப்படுகிறது. இந்நிலையில், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுகா பகுதிகளில் தாளடி மற்றும் சம்பா சாகுபடி செய்து இயந்திர அறுவடை செய்த நெல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த சன்ன ரக நெல் 2000 டன் 156 லாரிகளில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 42 வேகன் (ரயில் பெட்டி)களில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்கு மதுரைக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.