திண்டுக்கல், மார்ச் 19: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் நேற்று நிலக்கோட்டை தாலுகா, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டி பகுதி மக்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது: நிலக்கோட்டை தாலுகா, ஒருத்தட்டு கிராமம், சில்லலப்பட்டியில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் நிலக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 70 சென்ட் இடத்தினை மயானத்திற்கு ஒதுக்கி கொடுத்தனர்.
மேலும் அந்த மயானத்திற்கு சுமார் 15 அடி பாதை அரசால் அளந்து கொடுக்கப்பட்டது. அந்த பாதையை தற்போது வரை பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த இடத்தில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியால், சாலை அமைப்பதற்கு அனைத்து பணிகளும் நடந்து கொண்டிருக்கும் வேலையில் கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த சிலர் சாலை அமைப்பதற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி விட்டது.
இது சம்பந்தமாக கிராமமக்கள் அம்மையநாயக்கனூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினரிடம் முறையிட்டோம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருத்தட்டு நில அளவையர் பிரச்னைக்குரிய இடத்தை அளந்து எங்களுக்குரிய 15 அடி பாதையை அளந்து அளவுகள் ஊன்றி சென்றார். ஆனால் தற்போது எங்களுக்கு பாதையை தர மறுக்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரணை செய்து மயான பாதையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.