ஈரோடு, மார்ச் 19: நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் மூலமாக தெரிவித்து செல்ல ஏதுவாக அலுவலக நுழைவுப் பகுதியில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு விட்டு சென்றனர். அந்த பெட்டியின் அருகில் உதவியாளர்கள் இருவர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். நேற்று காலை முதல் வழக்கம் போல 150க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் மனுக்களை வழங்கிச் செல்ல வந்திருந்தனர். மனுக்களை வழக்கமாக பதிவு செய்து, அதிகாரிகளிடம் வழங்குவதற்கு பதிலாக மனுவில் முகவரி மற்றும் செல்போன் எண்களை எழுதி பெட்டியில் போட்டுச் செல்லுமாறு உதவியாளர்கள் கூறினர்.
இதையடுத்து, மனு அளிக்க வந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர். வழக்கமாக 250க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்படும் நிலையில், நேற்று சுமார் 100 மனுக்கள் மட்டுமே பொதுமக்களால் பெட்டியில் போட்டு செல்லப்பட்டது.